"நீங்கா நினைவுகளாய்..." - அன்புப் பிள்ளைகள், ஷரோன்,சோஜிகாந், மகரிஷன், பேரிசைப்பிரியா
அன்பின் பெப்பா,
வாழ்கையில் பிரிவுகள் வருவது யதார்த்தமே.ஆனால் உம்
பிரிவோ எங்கள் அனைவரையும் ஆழ்துயரில் ஆழ்த்தியதென்ன..?? அன்பிலும்,பண்பிலும்,கண்டிப்பிலும்,கரிசனையிலும் உம்மை மிஞ்சுவதென்பது எவராலும் இயலாத காரியமே...எங்கள்
வாழ்க்கைக்கு ஒரு நல்ல தகப்பனாகவும்,நண்பனாகவும் சிறந்த
ஆலோசகராகவும் எங்கள் வாழ்கையின் வழிகாட்டியாகவும் இருந்தீங்க...காலையில் தினமும்
நாங்கள் முதலில் கேட்கும் வார்த்தை “தம்பா...குஞ்சு...எழும்புங்கோனா...” என்பதே.
ஆனால் கடந்த சில நாட்களாக நாங்கள் அந்த குரலை மீண்டும் ஒருமுறை கேட்கமுடியாதா என
எண்ணித் தவித்த நாட்களுமுண்டு.
நாங்கள் உங்கள்
வீடு வரும் போது கூட எங்களை இன்முகத்துடன் வரவேற்று அன்பாக உபசரிப்பீர்களே
பெப்பா..! எங்களுக்கு ஒரு தலைசிறந்த ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீங்க
அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்க இப்ப எங்கள விட்டு பல மைல் தூரம்
கடந்து சென்றிருந்தாலும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காது. ஏழை
எளியவர்களுக்கு உதவும் மனப்பாங்கு மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கு இரங்கும் குணமும்
உம்மிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களே. பாடல்கள் பாடுவதிலும்
பகிடிகள் சொல்வதிலும் வல்லவர் நீங்கள்.
நாங்கள் கவலை,கஷ்டங்களில் தவித்த வேளைகளில் எங்களுக்கு ஆறுதலாக
நீர் சொல்லும் வார்த்தைகள் இன்னும் எம் மனக்கண்முன் வந்து செல்கின்றன.
இன்னும் எம் காதுகளில் உங்கள் “C.D.50” மோட்டார்
வண்டியின் சத்தம் நீங்காது ஒலித்துக்கொண்டிருகிறது. உங்களோடு கூட வண்டியில் நகர்
உலா வருவதும் எங்களுக்கு ஒரு சுகமான அனுபவமே. அதுமட்டுமா நீர் விட்டுச்சென்ற
புத்தகங்கள் கூட மீண்டும் ஒருமுறை உம் கரம் தம்மை பற்றாதா என ஏங்குகின்றனவே...
எளிமை என்பதன் உண்மை அர்த்தத்தை உங்களிடம் இருந்தே
நாங்க கற்றுக்கொண்டோம். கடவுள் பக்தியில் சிறந்த உங்களை போல், நாங்களும்
எதிர்வரும் காலங்களில் கடவுளுக்கு பயந்த ,கீழ்படிந்த பிள்ளைகளாக வாழ இறைவனை
மன்றாடுகின்றோம். எந்த ஒரு வேளையிலும் எங்களை தட்டிக்கொடுத்து, ஊக்கபடுத்தி உற்சாகபடுத்திய நேரங்களை நினைத்துப்பார்க்கும்
போது கண்களில் இருந்து கண்ணீர் அறியாது வழிகிறது பெப்பா... நீங்கள் இல்லாத இந்த
நாட்கள் எங்களுக்கு ஓர் துடுப்பு இழந்த படகை போன்றதே...இவ்வளவாக எங்கள் அனைவரது
கல்வி மீதும் அக்கறை கொண்ட தாங்கள்,
இறுதியில் நாங்கள் கல்வியில் பெற்ற வெற்றியை காணாது வெகு தூரமாய் பிரிந்தது ஏனோ???
பெப்பா...என்றோ ஒருநாள் நாங்களும் உங்களை ஆண்டவருடைய சமூகத்தில்
முகமுகமாக சந்திப்போம் என்ற நிச்சயத்துடன்...
நீங்கா நினைவுகளுடன் ,
உங்கள் அன்புப் பிள்ளைகள்,
ஷரோன்,சோஜிகாந், மகரிஷன், பேரிசைப்பிரியா
Comments
Post a Comment