"Veerasingam Uncle…" - நிரோஷா
மறக்க முடியாத ஆளுமை. எங்களது அருமையான குடும்ப நண்பர். சுவாரசியமாக கதைப்பதில் வல்லவர். நான் சிறுமியாக பாடல் குழுவில் இருக்கும் பொழுது ஆலயத்தினுள் Uncle இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடுவேன். அப்படியான திறமைமிக்க பாடகர். தன்னிகரில்லா இறைபற்று உடையவர்.
ஆசிரியராய், அதிபராய் செய்யும் செயல்களுக்கு அப்பால் சென்று ஏழை எளிய மாணவர்களுக்கு பொருளுதவி செய்து கல்வி பயில உதவி செய்தவர். என்னை காணும் போதெல்லாம் “பழுகாமத்தில் பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங்கள் இல்லாமல் இருக்கிறது அவைகளை எடுத்து தர முடியுமா?” என அக்கறையுடன் கேட்பார். பின்தங்கிய மாணவர்களையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களையும் தம் வீட்டுக்கு அழைத்து வந்து கற்பிப்பார். கதைகள், பாடல்கள் வாயிலாக வேதக் கதைகளை பலரும் கற்கப் புதிய உத்திகளைப் புகுத்தி வகுப்புக்கள் நடத்துவதில் வல்லவர். அவரின் உற்சாகத்தை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல அவரது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வில் மிக அக்கறை கொண்டு உறவினர்களின் பிள்ளைகளை தன் பிள்ளையாய் தன் வீட்டில் வைத்து வளர்த்து கல்வி அளித்து என்னை ஆச்சரியப்படுத்தியவர். மிகக்கனிவாகப் பேசுவார்.அன்பானவர். எளிமையானவர். நேர்மறை சிந்தனைகளுக்கு சொந்தக்காரர். அவரிடம் ஆங்கிலம் கற்ற என் மாணவிகள் அவரின் புலமைக்கு சான்று பகர்வார்கள். எளிய முறையில் ஆங்கிலத்தை மாணவர் விரும்பும் வகையில் கற்றுத்தரும் ஆசான். ஆன்மீகம், மொழி, சமூகப்பணி என கடைசி வரை ஓய்வின்றி பணியாற்றியவர்.
வலதுகரம் செய்வதை இடது கரம் அறியாது விளம்பரத்துக்கு வெளிச்சம் காட்டாது தமது பணிகளை நாளும் செய்த அருமையான மாமனிதர். Uncle ஐ நினைத்தாலே நினைவுகள் பலதூரம் பயணிக்கிறது. உலக வாழ்வில் ஓய்வின்றி ஓடிய Uncle க்கு இப்பொழுதுதான் பரமன் இயேசுவின் பொற்பாதத்தில் ஓய்வு கிடைத்திருக்கிறது. நிச்சயமாய் ஒருநாள் நித்திய வீட்டை அடையும் பொழுது Uncle ஐ நாம் முகமுகமாய் சந்திப்போம்.
என்றும்
நினைவுகளுடன்,
நிரோஷா
Comments
Post a Comment